கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இன்னும் 200 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்திருக்கின்றது. மேலும் 26 பேர் நிவாரண முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். நிவாரண முகாம்களில் 77 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வயநாடு மாவட்டத்தில் மொத்தம் 91 முகாம்களில் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பேரழிவை மாநில பேரிடராக அறிவித்து கேரளா அரசு அரசாணை வெளியிட்டது. நிலச்சரிவு காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. நிவாரணமாக செயல்பட்டு வரும் 10 பள்ளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.