வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அங்கு தோண்ட தோண்ட பல மனிதர்களின் உடல்கள் கிடைத்து வருகின்றது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதைய நிலச்சரிவு இருக்கின்றது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை சேர்ந்த மக்களுக்கு உதவி செய்யும் வகையில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் பொதுமக்களிடம் நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேலும் அம்மாநில கவர்னர் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியின் நிலையை உடனடியாக அறிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவதாக அமைச்சர்கள் நேற்று கூட்டம் கூட்டி பேசி இருந்தார்கள். இந்நிலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரளா வருவதாக இருந்தது.

ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று கேரளா வந்து வயநாட்டிற்கு சென்று நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.