கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த இரண்டு நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 1500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் இரண்டாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இருப்பினும் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை குறித்த தகவலை தெரிந்து கொள்வதற்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கின்றார்.