முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்றாங்க… பெண் மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு…!

முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்றாங்க… பெண் மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு…!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லி வருகிறார் என்று கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் நீதி வேண்டும் என்ற வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் மாணவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேற்குவங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகளின் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக ஏற்கனவே பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள். மேலும் போலீசாரில் ஒருவர் தங்களுக்கு பணம் தரும் முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டியும் முன் வைத்தார்கள்.

இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோர்களிடம் கூறவில்லை என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவிக்கையில் ‘பெண் மருத்துவர் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்க நான் ஒருபோதும் முன் வரவில்லை. அவதூரை தவிர இது வேறு எதுவும் இல்லை.

பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால் அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும் தான் தெரிவித்தேன். இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினித் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் துர்கா பூஜையின் போது சட்ட ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் மம்தா பானர்ஜி பொய் கூறுவதாக பெண் மருத்துவரின் பெற்றோர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது ‘முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா? நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும் உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் என தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தோம்’ என்று பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.