நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை இருப்பது போல விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது.
மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பயிர் காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருள்கள், உரம் மருந்துகள் உள்ளிட்ட இடுப்பு பொருட்கள் வாங்க மானியம் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை புகுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சமீபத்தில் டெல்லியில் வேளாண் துறைநுட்ப மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்ததாவது “கடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக 2,817 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது .
வேளாண்மை துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணி தொடங்க இருக்கின்றது. விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் சரிபார்க்க பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு செலவு அதிகரிப்பதுடன் சில தொல்லைகளும் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரப் போகிறோம்.
மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள் பயிர் சாகுபடி குறித்து தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளது. விவசாயிகளைப் பற்றிய தனிப்பட்ட தரவு எதுவும் இல்லை. அந்த குறையை இந்த திட்டம் நீக்கும் விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்.
அக்டோபர் மாதம் இந்த பணி தொடங்கும். இதற்காக முகாம்கள் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய முடிவு செய்து இருக்கின்றோம். மேலும் ஆதார் போல் விவசாயிகளுக்கு என்று தனி அடையாள எண் வழங்கப்படும். அதன் மூலம் பல்வேறு வேளாண் திட்டங்களை அவர்கள் எளிதில் பெற முடியும். விலைப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.