வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கின்றது. அங்கு கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகுந்த மழை பெய்த காரணத்தால் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் சூரல்மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாவதாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏகப்பட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். அதாவது 500 வீடுகளில் வசித்து வரும் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இதை கேள்விப்பட்ட பல மாநில தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கேரளாவில் இன்றும் நாளையும் துக்கம் கடைபிடிக்க மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்வதாக கேரள மாநிலம் அறிவித்திருக்கின்றது.