சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பதில் கொடுத்திருக்கிறார்கள்.
ஆந்திர பிரதேச முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டு தரமற்றதாக தயாரிக்கப்பட்டது என்றும், நெய்களுக்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தினார்கள். தற்போது தான் தூய நெய் பயன்படுத்தப்பட்டு கோவில்களின் தரமும் சுத்தமும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பா ரெட்டி மறுப்பு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது “சந்திரபாபு நாயுடு தனது கருத்துக்களால் திருப்பதி கோவிலின் புனித தன்மையையும், பல நூறு கோடி ஹிந்துக்களின் நம்பிக்கையும் சேதப்படுத்துகிறார்.
திருப்பதி கோவிலில் பிரசாதம் குறித்து சந்திரபாபு நாயுடு கூறிய கருத்து மிக மோசமானது. எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசக்கூட மாட்டார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளை கூற மாட்டார்கள். சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கின்றது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும் என் குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக இருக்கின்றோம். சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.