மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் என்கின்ற மாவட்டத்தில் ஒரு காட்டு பகுதி இருக்கின்றது. இதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சிலர் ஆடு மேய்ப்பதற்காக காட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.
அப்போது பெண்ணின் அழுகுரலை கேட்டவர்கள் அங்கு போய் பார்த்த போது ஒரு பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பெண்ணின் உடமைகளை சோதித்ததில் அவரிடம் அமெரிக்கா பாஸ்போர்ட் நகல் மற்றும் தமிழக முகவரியை கொண்ட ஆதார் கார்டு, மருந்து மாத்திரை சீட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
பிறகு அந்த பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மனம் மற்றும் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் நலமாக இருப்பதாகவும், மனரீதியான பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
அவரிடம் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டில் அவரது பெயர் லலிதா காய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காட்டில் பல நாள் பசியுடன் கடும் மழையில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்ததால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருக்கின்றது. மேலும் அவரின் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை தேடி போலீஸ் குழு ஒன்று தமிழகத்திற்கு விரைந்துள்ளது. இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.