தற்கொலை செய்து கொண்ட தாயின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாத காரணத்தால் தனது தாயின் உடலை வைத்து 11 வயது மகள் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானாவில் தன்னூர் மண்டலத்தில் உள்ள பெல்டராடோ கிராமத்தை சேர்ந்தவர் கங்காமணி. இவருக்கு 35 வயது ஆகின்றது.
இவரின் கணவர் 12 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் விவசாய தின கூலியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் தனது ஒரே மகள் துர்காவை வளர்த்து வந்திருக்கின்றார். துர்கா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசி உள்ளார்.
இதனால் துர்கா கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு துர்கா செய்வது அறியாமல் திகைத்து இருக்கின்றார். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தாயின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாததால் வீட்டின் முன்பு இருந்த வீதியில் தாயின் சடலத்தை வைத்து இறுதி சடங்கு செலவுக்கு பணம் வழங்கும் படி வருபவர்கள் போபவர்களிடம் யாசகம் வேண்டி இருக்கின்றார். இதையறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், அப்பகுதியை சேர்ந்த சில கட்சி பிரமுகர்களும் காசு வழங்கி கங்கா மணியின் இறுதி சடங்கை செய்ய உதவி செய்திருக்கிறார்கள்.