இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது  – சூர்யா பொறுப்பான வீடியோ !

இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது  – சூர்யா பொறுப்பான வீடியோ !

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது சமூகவிலக்கம்தான். அதாவது மக்களை தங்களைத் தாங்களே வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வைரஸ் பரவலை தடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து  தமிழ் சினிமா பிரபலங்ளான ரஜினி, கமல் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது நடிகர் சூர்யாவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர் ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாம் இப்போது பரப்ப வேண்டிய விஷயம் விழிப்புணர்வு தான். ஜல்லிக்கட்டு, வெள்ளம், புயல் போன்றவற்றுக்காக வெளியே வந்து போராடிய நாம், இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம். சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம், மக்கள் அறியாமையால் வெளியில் சென்றது தான். இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது. தவிர்க்கமுடியாத தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்ல இது வெக்கேஷன் டைம் அல்ல, பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் செல்வதன் மூலம் அவரை சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியொரு மன்னிக்க முடியாத தவறை செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள் தனம் என்பார்கள். இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் பரப்புங்கள். குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். கொரோனாவை தடுக்க அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருப்போம். வருமுன் காப்போம்’ எனக் கூறியுள்ளார்.