மலையாள நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புக்காக சென்ற போது கொரோனாவால் ஜோர்டனில் உள்ள பாலைவனம் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ். இவர் நடிப்பில் உருவாகும் ஆடுஜீவிதம் எனும் படத்தின் படப்பிடிப்புக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தார். அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் அங்கேயே படக்குழுவினர் அனைவரும் முடக்கப்பட்டனர். இப்போது அந்தப் படக்குழுவினர் 58 பேரும் ஜோர்டான் நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் தங்களின் நிலைப்பற்றி நடிகர் பிருத்விராஜ் தனது சமூகவலைதளத்தில் ‘எங்கள் குழுவின் ஒரு மருத்துவரும், ஜோர்டான் அரசின் மருத்துவரும் எங்களை அடிக்கடி பரிசோதிக்கின்றனர். எங்கள் 58 பேரை மீட்பது தற்போது இந்திய அரசாங்கத்தின் பிரதானமான நோக்கமாக இருக்காது. ஏனென்றால் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்திருக்கின்றனர். அதனால் எங்களுக்கான நேரம் வரும்போது எங்களை மீட்டு உதவி செய்யவேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.