கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்று சந்தேகம் எழுந்த நிலையில் அதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ இப்போதுள்ள நிலைமையில் எப்படி வெளிநாடுகளில் இருந்து வீரர்களைக் கொண்டு வருவீர்கள். மே மாதத்தின் நடுப்பகுதி வரை இப்படிதான் நிலைமை இருக்கும். தற்போதைய நிலைமை உலகின் எந்தவொரு விளையாட்டுக்கும் சாதகமானதாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.