2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகிக் கொண்டே போகின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது.
ஆனால் அதன் பின்னரும் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை எனத் தெரிகிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மகாரஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.