தமிழகத்தில் முதல் கொரோனா பலியாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் உயிரிழந்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸூக்கு யாரும் பலியாகாத நிலையில் நேற்று மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

