திமுக பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கடைசியாக கலைஞரின் ஓராண்டு நினைவஞ்சலி விழாக்களில் கலந்துகொண்ட பேராசிரியர் க அன்பழகன் அதன் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது. 98 வயதான அன்பழகன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக வின் பொதுச் செயலாளராகவும் திமுக தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பனாகவும் இருந்து கட்சியைக் கட்டிக் காப்பாற்றினார். அண்ணா திமுகவை ஆரம்பித்த போது அவருடன் இருந்த தலைவர்களில் அன்பழகனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பழகனின் உடல் தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே திமுக தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.