காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த பத்தாம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்றைய நன்பகல் நிலவரப்படி தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
விக்கிரவாண்டி தொகுதி வாக்களப் பெருமக்களுக்கு முதலமைச்சர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னிலை விவரங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகளே வெற்றி பெற்று வரும் அதிசயம் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன் காரணங்கள் ஆராயப்படும் என்றார்.
இந்த இடைத் தேர்தல் 2026ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என அமைச்சர்கள் சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சிகள் இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவதும், அதன் பின்னர் நடக்கும் பொதுத் தேர்தலில் நேர் எதிர்மறையான முடிவுகளைப் பெறுவதும் சகஜமான ஒன்றாக இருப்பதாகவும் சொன்னார்.
இந்த தேர்தலை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணம் இனி ஈடேறாது என்றார். மேலும் முழுமையான முடிவுகள் வந்த பிறகு இந்த இடைத் தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து விளக்கம் அளிப்பதாகவும் பேசினார். பேட்டியின் இடையே தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பேசினார் அண்ணாமலை.











